புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு அவசர செயல்வீரர் கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். அவர் விராலிமலை சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளரும் ஆவார். அத்துடன் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராமச்சந்திரன், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் உதயகுமார் ஆகியோரும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இந்த நேரத்தில் அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டிய அவசியம் என்ன, தற்போது உள்ள சூழ்நிலையில் மீண்டும் எடப்பாடி யார் ஆட்சிக்கு வருவதற்கான என்னவெல்லாம் சாதகமான சூழ்நிலை இருக்கிறது, வாக்குகளை எப்படி சேகரிக்க வேண்டும் வேட்பாளர்களை எப்படி வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது குறித்து எல்லாம் விஜயபாஸ்கர் கட்சி தொண்டர்களிடமும் பொறுப்பாளர்களிடமும் விரிவாக பேசினார். கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் நகர பொறுப்பாளர்கள் மாவட்ட பிரதிநிதிகள் ஒன்றிய பிரதிநிதிகள் அனைவரும் தங்களது கருத்துகளையும் எடுத்துக் கூறினார்கள். இறுதியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் அதிமுக வென்றாக வேண்டும் வெல்வதற்கு என்ன பணிகள் எல்லாம் செய்ய வேண்டும் என்று பேசி முடிவு செய்யப்பட்டன.

மேலும் இன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பிறந்தநாள் என்பதால் அவரது ஏற்பாட்டில் கலந்துரையாடல் கூட்டத்துக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான நபர்களுக்கும் அசைவப் பிரியாணி வழங்கப்பட்டது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வரவழைக்கப்பட்டு கேக் வெட்டியதோடு ஏராளமானோர் சால்வைகளையும் பயனாடைகளையும் அவருக்கு அணிவித்து அவரையும் மகிழ்வித்து தாங்களும் மகிழ்ந்தனர்.



