• Thu. May 9th, 2024

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சி கொடிகள் தயாரிக்கும் பணிகள் துவங்கியது

BySeenu

Jan 31, 2024

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இனிவரும் நாட்களில் பிரச்சாரம், பொதுகூட்டம், கட்சி பேரணிகள், தெருமுனை பிரச்சாரம் என தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கிவிடும். அதே சமயம் அந்தந்த கட்சி அலுவலகங்கள், பிரச்சாரம் நடைபெறும் இடங்கள், பேரணி நடைபெறும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் அந்தந்த கட்சி கொடிகள் அதிகளவு காணப்படும்.

இந்நிலையில் கோவையில் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணிகள் துவங்கி உள்ளது. கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பிரபல காந்திஜீ கதர் ஸ்டோரில் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னேற்பாடுகளாக முக்கிய கட்சிகளின் கொடிகள், கட்சி சின்னங்கள் பொறித்த கொடிகள், கட்சி தலைவர்கள் புகைப்படங்கள் பொறித்த கொடிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து கொடி தயாரிப்பாளர்கள் கூறுகையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளின் கொடிகளையும் கட்சித் தலைவர்கள் கட்சியின் சின்னங்கள் பொறித்த கொடிகளையும் தயாரித்து வைத்து கொள்வோம் எனவும் கட்சி கூட்டணிகள் முடிவான பின்பு அதற்கு தகுந்தாற்போலும் கொடிகளையும் தயாரிக்க துவங்கி விடுவோம் என தெரிவித்தனர். மேலும் இங்கு கட்சி மோதிரங்கள், கையில் கட்டும் பேண்டுகள், தொப்பிகளும் கிடைக்கும் என கூறினர்.

இங்கு குடியரசு மற்றும் சுதந்திர தினங்களன்று தேசியக்கொடி அதிகளவு தயாரிக்கப்படும் என்பதும் கோவில் விழாக்களுக்கும் கொடிகள் தயாரிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *