• Thu. Feb 26th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

53 ஆண்டுகளுக்கு பிறகு மீனாட்சியம்மன் கோவிலில் ஆதீனம்

Byகுமார்

Dec 1, 2021

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆகம விதிப்படி ஆறுகால பூஜைகள் முறையாக நடைபெற்று வருகின்றன.

இதனை கோவில் சிவாச்சாரியார்கள், தலைமை அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர். காலை 6 மணிக்கு உஷாக்கால பூஜை, 9 மணிக்கு கால சந்தி பூஜை, 12 மணிக்கு உச்சி சால பூஜை, மாலை 6 மணிக்கு சாயரட்சை கட்டளை பூஜை, இரவு 8 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 9 மணிக்கு அர்த்தஜாம பூஜை மீனாட்சியம்மன் மற்றும் சுந்தரேஸ்வரருக்கு நாள்தோறும் நடைபெற்று வருகிறது.

இதில் பல ஆண்டுகள் மதுரை ஆதீனம் சார்பாக மாலை 6 மணிக்கு நடைபெறும் சாய ரட்சை கட்டளை பூஜை மற்றும் சுவாமி சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் நெய்வேத்தியம் நடைபெற்று வந்த நிலையில், 1968 க்கு பிறகு இந்த அபிஷேக நிகழ்வு மற்றும் பூஜை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் 293வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாசாரிய சுவாமிகள் பொறுப்பேற்றார்.

அதனைத் தொடர்ந்து, 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இன்று முதல் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு தினசரி ஆதீனம் சார்பாக நடைபெற்று வந்த அபிஷேகம் மற்றும் நெய்வேத்திய சாயரட்சை கட்டளை பூஜை மீண்டும் நடைபெறும் என மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் இனி வழக்கமாக மாலை நடைபெறும் சாயரட்சை கட்டளை பூஜையை புதிதாக பொறுப்பேற்றுள்ள மதுரை ஆதினம் மேற்கொள்ள உள்ளார்.