நகைச்சுவை நடிகை ஷர்மிளா தாப்பா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள நாட்டைச் சேர்ந்தவர் ஷர்மிளா தாபா. இவர் சென்னையில் தங்கி விஜய் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் காமெடி ஷோக்களில் பங்கேற்று
வந்தார். இதன் தொடர்ச்சியாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தார். விசுவாசம், வேதாளம் , சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் ஷர்மிளா தாபா நடித்து பிரபலமானார்.
இந்த நிலையில் ஷர்மிளா தாப்பாவின் பாஸ்போர்ட் காலாவதியான நிலையில் மீண்டும் விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தில், அண்ணா நகர் முகவரியை ஆவணமாக கொடுத்திருந்தார். அதில், முறைகேடு நடைபெற்றுள்ளதாக உள் துறை அமைச்சகம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் தெரிவித்தது.
அந்த புகாரில், நேபாளத்தை சேர்ந்தவர் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் பெற்றது எப்படி என அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இந்த புகாரில் அடிப்படையில் நடிகை ஷர்மிளா தாப்பா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது திரைப்பட வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.