• Mon. Feb 2nd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

3 ஆம் பாலினத்தவரை துன்புறுத்தினால் நடவடிக்கை – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

மூன்றாம் பாலினத்தவர் மற்றும், ஓரினச்சேர்க்கையாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகள் கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த இரு பெண்கள்,  நட்புடன் பழகத் தொடங்கி, பின்னர் அது காதலாக மாறியதால், பிரிய மனமில்லாமல் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர். இதற்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து, பிரிக்க முயற்சித்ததால், இருவரும் மதுரையில் இருந்து சென்னை வந்து, தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி வேலை தேடினர். இந்நிலையில், இருவரையும் காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் இரு பெண்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை அங்கீகரிப்பது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த நீதிமன்றம் அதை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள்  குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய,மாநில  அரசுகளுக்கு உத்தரவிட்டது.இந்த நிலையில், இந்த வழக்கு  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர்,ஓரினச் சேர்க்கையாளர்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும், அவர்களை துன்புறுத்த கூடாது எனவும் காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இது குறித்து காவலர்களுக்கு காவலர் பயிற்சி மையம் மூலமாக பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனங்களைளையும் காவல்துறையினர் துன்புறுத்துவதாக நீதிமன்றம் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து,மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனங்களை துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களை காவல்துறையினர் துன்புறுத்தினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் நடத்தை விதிகளில், புதிய விதியை கொண்டுவர வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும்,  ஒடுக்கப்பட்டோர் நலனுக்கு பல சீர்திருத்தங்களை செய்து வரக்கூடிய மாநில அரசு ஒரு முன்னுதாரணமாக இருந்து, மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரின சேர்க்கையாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் முன்னேற சாதகமான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஊடகங்கள் இதுபோன்ற செய்தியை கையாளும்போது சுயகட்டுப்பாடுடனும்,வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும் என தெரிவித்த நீதிபதி, இந்த விஷயத்தில் ஊடகத்தினர் விழிப்புடன் இருப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்து,அக்டோபர் 4 ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.