தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும், போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறி விட்டதாக குற்றம் சாட்டி அதிமுக சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டங்கள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு உசிலம்பட்டி அதிமுக நகர் கழகத்தின் சார்பில் முன்னாள் எம்எல்ஏ-க்கள் இ.மகேந்திரன், பா.நீதிபதி, ஏ.கே.டி. ராஜா தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேஜ் அணிந்து கண்டன பதாதைகளை ஏந்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி தேவர் சிலையிலிருந்து பேரையூர் சாலை வரை சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு 200க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.