மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் போதிய பேருந்து வசதி இல்லாததால் காலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிகொண்டு செல்லும் நிலை காணப்படுகிறது. இது குறித்து பல்வேறு முறை புகார் தெரிவித்தும் போக்குவரத்துக் கழகத்தினர் கூடுதல் பேருந்துகளை இயக்க முன் வராததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக காலை நேரங்களில் குருவித்துறை, கருப்பட்டி, நாச்சிகுளம் போன்ற பகுதிகளில் இருந்து மதுரை, திருமங்கலம், வாடிப்பட்டி, உசிலம்பட்டி போன்ற பகுதிகளுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் செல்லும் நிலையில் குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால், பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கி செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக விபத்துகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சென்ற வாரம் குருவித்துறையிலிருந்து மதுரை சென்ற பேருந்தின் படிக்கட்டுகளில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் தொங்கிச் சென்ற நிலையில் சோழவந்தான் பத்திரகாளி அம்மன் கோவில் அருகில் பேருந்து சென்றபோது படியில் தொங்கி சென்ற வாலிபர் தவறி கீழே விழுந்ததில் அவரின் இரண்டு கால் விரல்கள் துண்டானது இதனால் பேருந்தை நிறுத்தி அருகில் இருந்தவர்கள் சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை செய்து பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இவர் அரசு போக்குவரத்து பணிமனை மதுரை கிளையில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருவதாகவும் படிக்கட்டில் தொங்கி சென்றதன் காரணமாக விபத்து ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் தொடர்ச்சியாக நடைபெறும் இது போன்ற விபத்துகளால் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் பயணிக்கும் சூழ்நிலை உள்ளது ஆகையால் மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு சோழவந்தானிலிருந்து வெளியூர் செல்வதற்கு காலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்