தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில்சிக்கயன்பட்டியைச் சேர்ந்த லெனின் (34) மற்றும் முருகன் (43) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் உத்தமபாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். கோவிந்தன்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற பொக்லைன் கிரேன் மீது இருசக்கர வாகனம் பலமாக மோதியது.

இந்த கோர விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த லெனின் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். .அவருடன் பின்னால் அமர்ந்து வந்த முருகன் பலத்த காயமடைந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த உத்தமபாளையம் காவல்துறையினர், காயமடைந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லெனினின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து நடந்த இந்தப் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறுகலாக உள்ள இந்தப் பாதையை உடனடியாக விரிவுபடுத்தி, போதிய மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




