புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா குண்டாண்டார் கோவில் அருகே உள்ளது தெம்மாவூர் ஊராட்சி பூச்சிக்குடி வயல் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்குச் செல்லும் பாதையில் தனிநபர் ஒருவர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கற்கால்கள் ஊன்றி பாதை விடாமல் தடுத்து இருப்பதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு இந்த கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த கோமதி மற்றும் பெண்கள் கூறுகையில் தெம்மாவூர் ஊராட்சி பூச்சிக்குடி வயல் கிராமத்தில் இருந்து வருகிறோம். இங்குள்ள பள்ளிக்குச் செல்லும் வழி மற்றும் பொது இடத்தை இதே ஊரைச் சேர்ந்த வேதமுத்து என்பவர் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார். இது குறித்து கடந்த 9 மாதங்களாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் தொடர்ந்து கிராம மக்கள் சார்பாக புகார் கொடுத்து வருகிறோம்.

அந்த நிலத்தை அளந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றித் தர உயர் அதிகாரிகள் உத்தரவிட்ட பின்பும் இங்குள்ள தாசில்தார் மற்றும் கீழ்நிலை அலுவலர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு அந்த இடத்தை அளவீடு செய்து தராமல் இருக்கிறார்கள். அதை அளவீடு செய்தால் தான் ஆக்கிரமிப்பு அகற்ற முடியும். இந்த வழியாகத்தான் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கும் செல்ல முடியும். ஆனால் பொது இடத்தை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு அதில் பாதை விட வேதமுத்து என்பவர் மருத்துவர்.

எனவே மாவட்ட ஆட்சியர் இந்த பிரச்சனையை உடனடியாக கையில் எடுத்துக்கொண்டு நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அவர் ஆக்கிரமித்து வைத்திருக்கும் இடம் அவரது சொந்த நிலம் என்றால் எங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் புறம்போக்கு என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் வருவாய்த்துறை அலுவலர்களிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் நாங்கள் கொடுத்திருக்கிறோம். எனவே உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும்.
இல்லையென்றால் ஒரு வாரத்தில் நாங்கள் அதே ஊரில் சாலை மறியல் செய்ய வேண்டி இருக்கும். அதன் பிறகு வருவாய்த்துறை அலுவலர்களும் அதிகாரிகளும் காவல்துறையும் ஓடி வர வேண்டியிருக்கும். உடனடியாக மாவட்ட ஆட்சியர் செய்து தருவார் என்ற நம்பிக்கையுடன் மனுவை கொடுத்திருக்கிறோம் என்றனர்.




