கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பன்னியர் சுண்டல் காந்திகிராமம் காலனியைச் சேர்ந்தவர் பாலாஜி (34). இவர் லாரியில் கிளீனராக பணியாற்றி வருகிறார். கட்டப்பனை மற்றும் அதனை சுற்றியுள்ள தோட்டங்களுக்கு உரம் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், அங்குள்ள ஏலத்தோட்டத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து லாரியில் கொண்டு வரப்பட்ட உரத்தை இறக்க உறவினருடன் பாலாஜி சென்றார். நேற்று இரவு பணி முடிந்ததும் கட்டப்பனையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்கு பரோட்டா வாங்கி உள்ளார். லாரியை ஓட்டுநர் ஓட்டி செல்ல பாலாஜி அவர் அருகே அமர்ந்தவாறு பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.அப்போது திடீரென அவரது தொண்டையில் பரோட்டா சிக்கிக்கொண்டது. இதனால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதை அறிந்த லாரி ஓட்டுநரான அவர் நண்பர் உடனடியாக லாரியை மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால் வரும் வழியிலேயே பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.