தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது. ஒரே மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில் பொதுக்குழு கூட்டம் கூடியது.
கூட்டம் துவங்கியது முதல் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ்க்கு எதிராக கோஷம் எழுப்பிய வண்ணம் இருந்தனர். மேலும் பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் வைத்தியலிங்கத்தை பேச விடவில்லை. இந்த கூட்டத்தின்போது பாதியிலேயே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து வெளியேறினார். சட்டத்துக்கு புறம்பாக கூட்டம் நடப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் குற்றம்சாட்டிவிட்டு அவர்களும் வெளிநடப்பு செய்தனர். கூட்டத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறியபோது அவரை நோக்கி தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. இந்த சம்பவம் அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசி அவமதித்ததை கண்டித்து தேனி பழைய பஸ் நிலையம் அருகில் அவருடைய ஆதரவாளர்கள் சிலர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்து உருவபொம்மையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.