குதுப்மினார் ஸ்தூபி விஷ்ணு ஸ்தம்பமாக இருந்தாகவும் அதை மீண்டும் இந்துகளின் வழிபாட்டு தலமாக மாற்றவேண்டும் என – இந்து அமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.
டெல்லியில் உள்ள குதுப்மினார், உலகிலேயே உயரமான மசூதி ஸ்தூபியாக கருதப்படுகிறது. ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோவால் உலகின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட பெருமைக்கு உரியது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது அதனை இந்து அமைப்புகள் பிரச்சனையாக்கி வருகிறது. அதே போல டெல்லியில் உள்ள முஸ்லிம் மன்னர்களின் பெயர்களில் உள்ள தெருக்கள்,இடங்களை மாற்ற வேண்டும் என ஒருபுறம் பிரச்சனைகளை கிளப்பிவருகின்றனர்.
குதுப்மினார், முன்பு விஷ்ணு ஸ்தம்பமாக இருந்ததாக சில இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. அந்த வளாகத்தில் உள்ள மசூதிக்குள் இந்து, ஜைன மத கடவுள் சிலைகள் இருப்பதாகவும், அவற்றை வெளியே எடுத்து வந்து வழிபாடு செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளன. இதை அடிப்படையாக வைத்து, ஐக்கிய இந்து முன்னணி என்ற இந்து அமைப்பு, குதுப்மினாரில் ‘அனுமன் துதி’ பாட நேற்று அழைப்பு விடுத்தது.
இதையடுத்து, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. எனினும் அங்கு செல்ல முயன்ற இந்து அமைப்பினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பதற்றமான சூழல் உருவானது. குதுப்மினார் என்ற பெயரை விஷ்ணு ஸ்தம்பம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் அப்போது கூறினர்.