• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தந்தை ஸ்தானத்தில் நின்று தம்பி மகனுக்கு திருமணம்… உருகிய கே.என்.நேரு

தனது சகோதரர் கே.என்.ராமஜெயத்தின் மகன் திருமண விழா இனிதே முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று முடிந்த நிலையில், ஒரு பெரும் கடமையை நிறைவேற்றிய நிம்மதி அடைந்திருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு.

மகன் திருமணத்தை காண கே.என்.ராமஜெயம் உயிருடன் இல்லாததை எண்ணி அமைச்சர் கே.என்.நேரு உட்பட அவரது குடும்ப உறவுகள் கண் கலங்கிய நெகிழ்ச்சியான நிகழ்வும் நடந்துள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் கே.என்.ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நிலையில், இன்று வரை கொலையாளிகள் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் கடைசி சகோதரர் மறைந்த கே.என்.ராமஜெயத்தின் மகன் திருமண விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா திருமண மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண விழாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்கிய நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, திருமாவளவன், கி.வீரமணி உட்பட அனைவரும் கலந்துகொண்டனர்.

அமைச்சர் நேருவுடன் 3 சகோதரர்கள் உடன் பிறந்திருந்தாலும் அவருக்கு அவரது கடைசி தம்பியான கே.என்.ராமஜெயம் மீது என்றுமே தனிப்பட்ட பாசம் உண்டு. ஆரம்பக்காலத்தில் அமைச்சர் நேருவுக்கு பக்கபலமாக நின்று அரசியலில் அவர் இந்தளவுக்கு வளர்ச்சியை எட்டிப்பிடிக்க சாதுர்யமான பணிகளை செய்து கொடுத்தவர் ராமஜெயம். இதனிடையே கடந்த 2012-ம் ஆண்டு நடைபயிற்சி சென்ற ராமஜெயம் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

தம்பியின் இழப்பை இன்றுவரை ஈடு செய்ய முடியாமல் தவித்து வரும் அமைச்சர் கே.என்.நேரு, தம்பியின் மகன் திருமணத்தை தனது மகன் திருமணத்தை போலவே சிரத்தை எடுத்து நடத்தி முடித்திருக்கிறார். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒருவர் விடாமல் அழைப்பு விடுத்து, முதல்வர் ஸ்டாலினை தலைமை தாங்க வைத்து திருச்சி மாவட்ட திமுகவினரை சென்னைக்கு அழைத்துச்சென்று ஒரு மினி திருவிழாவை போல் நடத்தி முடித்திருக்கிறார் நேரு.

இப்படியொரு மகிழ்ச்சியான தருணத்தில் சகோதரர் கே.என்.ராமஜெயம் இல்லாததை எண்ணி அமைச்சர் நேருவும் அவரது குடும்ப உறவுகளும் கண் கலங்கி நெகிழ்ந்த நிகழ்வும் நடந்துள்ளது. இதனிடையே சென்னையில் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், திருச்சியில் வரவேற்பு விழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.