அதிமுகவில் சசிகலா, தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கு தேனி நிர்வாகிகள் ஓபிஎஸ்சிடம் மனு ஒன்றை அளித்தனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஈபிஎஸ் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்றாத நிலையில், தொடர்ந்து நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக மோசமான தோல்வியை சந்தித்திருந்தது. நேற்று (மார்ச்.2) ஓ.பி.எஸ்.. தலைமையில் நடந்த கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் இணைப்பு தொடர்பாக பேசியுள்ளனர். மேலும் சசிகலாவை அதிமுக-வில் இணைக்க வேண்டுமென தேனியில் அதிமுக நிர்வாகிகள் ஓ.பி.எஸ்.யிடம் வலியுறுத்தினர்.இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஆறுக்குட்டி பேசியபோது, அதிமுகவை சசிகலா (அல்லது) தினகரன் தலைமை ஏற்கவேண்டும். தற்போது ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் என 2 பேர் வழிநடத்தியும் கட்சி முன் வரவில்லை. ஆகவே ஒற்றை தலைமையே தேவை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், மாநில கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோருடன் தற்போது அவரச ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
ஏனெனில் சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என்ற கருத்து வலு பெற்று வரும் நிலையில், இந்த அவசர ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கு முன்பாக சசிகலாவுக்கு ஆதரவாக பேசிய சிலபேர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு இருந்தாலும், தற்போது இந்த கருத்தை முக்கியமான நிர்வாகிகள் பல பேரும் முன்வைத்து வருவதால் பலமுறை ஆலோசித்து அதன் பிறகே இதன் மீதான நடவடிக்கை என்ன என்பது தெரியவரும்.