• Sun. Jun 7th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

என்னை யாரும் கடத்தவில்லை; வடிவேலு பாணியில் மதுரை வேட்பாளர்

கண்ணாத்தாள் திரைபடத்தில் ஆடுதிருடியதாக வடிவேலு மீது குற்றம் சாட்டப்பட்டு பஞ்சாயத்து விசாரிக்கப்படும். அதில் பிராது (குற்றம் கூறியவர்)கொடுத்தவர் ஆடு திருடு போகல ஆடு திருடு போன மாதிரி கனவு கண்டேன் என்பார். அது போல தான் ஒரு சம்பவம் தான் மதுரையில் அரங்கேறி அதிமுகவினரிடையே பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்ட அதிமுக பெண் வேட்பாளரை திமுகவினர் கடத்திவிட்டதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் வேட்பாளர் என்னை யாரும் கடத்தவில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. ஒன்பதாவது வார்டு அதிமுக வேட்பாளராக இந்திராணியும், திமுகவின் சார்பில் கிருஷ்ணவேணியும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிமுக வேட்பாளர் இந்திராணியை அப்பகுதி திமுகவினர் கடத்தி வைத்து வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுவதாகவும், வேட்பாளரை கடத்தி விட்டார்கள் என்று கூறி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் கட்சியினர் வாடிப்பட்டியில் பேருந்து நிலையம் முன்பு உள்ள அண்ணா சிலை அருகே தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் வேட்பாளர் இந்திராணி என்னை யாரும் கடத்தவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் உடல் நிலை சரியில்லாததால் வேட்புமனுவை திரும்பப்பெற்றதாகவும் கூறியுள்ளார். வடிவேலு பட பாணியில் வாபஸ் வாங்க சென்ற தன்னை யாரோ கடத்தியது போல அதிமுகவினர் எண்ணியதாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை என்று இந்திராணி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கட்சியில் வேட்பாளராக அறிவிப்பத்கற்கே ஐந்து லட்சம் பத்து லட்சம் கேட்கிறார்கள். இவ்வளவு செலவு செய்து தேர்தலில் தோற்றுவிட்டால் என்ன செய்வது அதற்கு கிடைக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு வரவுக்கும் செலவுக்கும் கணக்கு போட்டுவிட்டு லாபத்தை பிறகு பார்த்துகொள்வோம் என்று பல வேட்பாளர்கள் வாபஸ் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவதாக களம் நிலவரம் கூறுகிறது.

ஆனால் இவரை கடத்தியதாக செய்தி எப்படி பரவியது, சுயேட்சை வேட்பாளராக இல்லாமல் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் திடீர் மனமாற்றத்திற்கு என்ன காரணம் ,திமுகவினர் மிரட்டினார்களா என்பது இப்போது வரை புரியாத புதிராக உள்ளது.

அதிமுக வேட்பாளர் வாபஸ் பெற்றதை தொடர்ந்து மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டில் திமுக வேட்பாளர் கிருஷ்ணவேணி பால்பாண்டி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.