• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தமிழக இட ஒதுக்கீடு எப்படி பொருந்தும் – உயர்நீதிமன்றம் கேள்வி!…

By

Aug 10, 2021

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மத்திய அரசுக்கு ஒதுக்கிய பின் தமிழக இட ஒதுக்கீடு அதற்கு எப்படி பொருந்தும்? என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், அந்த இடங்கள் திரும்ப வழங்கப்பட்டால் மட்டுமே தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்ற முடியும் என தெரிவித்தது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020 ஜூலையில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும், இந்த இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தமிழக கல்லூரிகளுக்கு பொருந்தாது எனவும் வாதிட்டார்.

அப்போது, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மத்திய அரசுக்கு ஒதுக்கிய பின் தமிழக இட ஒதுக்கீடு அதற்கு எப்படி பொருந்தும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மத்திய அரசு தான் இதுகுறித்து முடிவு செய்ய முடியும் எனவும், தமிழக இட ஒதுக்கீடு அமல்படுத்த கூற முடியாது எனவும், அந்த இடங்கள் மாநிலங்களுக்கு திரும்ப வழங்கப்பட்டால் மட்டுமே தமிழக அரசு இட ஒதுக்கீடு பின்பற்ற முடியும் என தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 69 சதவீத இட ஒதுக்கீட்டையே அமல்படுத்த வேண்டும் என திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சன் விளக்கமளித்தார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நடராஜன், மருத்துவ படிப்புகளில் அனைத்து மாநில மாணவர்களும் பயனடைய உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அகில இந்திய ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதாகவும், தகுதி அடிப்படையில் மட்டுமே அந்த இடங்கள் நிரப்பப்பட்டதாகவும், 2007-08ம் ஆண்டு முதல் பட்டியலினத்தவர்களுக்கு 15 சதவீதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அகில இந்திய ஒதுக்கீடு என்பது அகில இந்திய கொள்கை என்பதால், அகில இந்திய இட ஒதுக்கீட்டிற்கு தான் பொருந்தும். என்றும், மாநில அரசு இட ஒதுக்கீடு பொருந்தாது எனவும் குறிப்பிட்டார்.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநிலங்களின் இட ஒதுக்கீட்டை பின்பற்றுவது குழப்பத்தை ஏற்படுத்தும் எனக் கூறிய அவர், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்றும் தமிழக அரசு, இதர பிற்படுத்தபட்டவர்களுக்கு மாநில அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்ற எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.

வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிவடையாததால், வழக்கின் விசாரணையை தலைமை நீதிபதி அமர்வு, ஆகஸ்ட் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தது.