2022ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அக்கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை இன்று நேரில் சந்தித்தார். கையை அசைத்து விஜயகாந்த் வாழ்த்துகளை பகிர்ந்ததால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை சந்திக்க சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். பிரேமலதா விஜயகாந்த், மகன்விஜய பிரபாகரன், மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க வந்த தொண்டர்களை நோக்கி விஜயகாந்த் கைகளை அசைத்து தனது வாழ்த்தை தெரிவித்துக்கொண்டார். தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் புத்தாண்டு தினத்தையொட்டி ரூபாய் நோட்டுக்களை பரிசாக வழங்கினார்.
விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். பொது நிகழ்ச்சிகளில் விஜயகாந்த் கலந்துகொள்வதும் குறைந்துபோனது. இதனிடையே, சிங்கப்பூர், அமெரிக்கா, துபாய் போன்ற வெளிநாடுகளில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் தொண்டர்களை சந்தித்துள்ளதும், அவர்களை நோக்கி உற்சாகமாக கைகளை அசைத்து வாழ்த்து கூறியதும் தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.