தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (14.09.2026) மதியத்திற்கு மேல் திடீரென வானிலை மாறி பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

மழை தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அதாவது மதியம் 2 மணி அளவில் சின்னமனூர் நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மாலை வரை, கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கும் மேலாக மின் இணைப்பு சீராகாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மழை காரணமாக வீடுகளிலேயே முடங்கியுள்ள மக்கள், மின்சாரம் இல்லாததால் அன்றாட பணிகளை கூட செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்கள், சிறு கடைகள் வைத்திருப்போர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். செல்போன் சார்ஜ் கூட செய்ய முடியாமல் தவிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மழைக்காலங்களில் இதுபோன்ற மின்தடை அடிக்கடி ஏற்படுவதாகவும், மின்வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நிர்வாகிகளான மாவட்ட ஆட்சியர், மின்வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் நகராட்சி ஆணையாளர் ஆகியோர் உடனடியாக களத்தில் இறங்கி, பழுதை சரிசெய்து மின் இணைப்பை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








