கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் பகுதியில் உள்ள, அரசு பள்ளியில், சி.ஆர். சுவாமிநாதன் ஒருங்கிணைந்த ஆய்வகக் கட்டிடத் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதனை, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளையின் நிதியுதவியின் கீழ் கட்டப்பட்டுள்ள சி. ஆர். சுவாமிநாதன் ஒருங்கிணைந்த ஆய்வகக் கட்டிடத்தின் திறப்பு விழா, கோவைமாவட்டம், கோவில்பாளையம், அடுத்த சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஒருங்கிணைந்த ஆய்வகக் கட்டிடத்தைத் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள், கோவை குடியிருப்போர் விழிப்புணர்வு சங்கமான ராக் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ராக் அமைப்பின் நிறுவனர், சௌந்தரராஜன், அறக்கட்டளைக் குழுவின் தலைவர் பாலசுந்தரம், ராக் அமைப்பின் தலைவர் பாலசுப்பிரமணியன்பள்ளித் தலைமை ஆசிரியை விமலா, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை அரசு பள்ளிகளில் நிலவும் முக்கியமான உள்கட்டமைப்புக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குறிப்பாக, கிராமப்புற மற்றும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான கல்விக்கான வாய்ப்புகளை மேம்படுத்தி, அவர்களுக்கு சிறந்த கல்விச் சூழலை உருவாக்குவதே இம்முயற்சியின் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மாணவர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில் நவீன கணினி ஆய்வகம், வேதியியல் ஆய்வகம், இயற்பியல் ஆய்வகம் மற்றும் உயிரியல் ஆய்வகம் ஆகியவை தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாய்வகக் கட்டிடம் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கான முன்மாதிரியான ஒருங்கிணைந்த ஆய்வகக் கட்டிடமாக உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாடப்புத்தக அறிவுடன் மட்டுமின்றி, செய்முறைப் பயிற்சி மற்றும் நேரடி ஆய்வுகளின் மூலம் அறிவியல் அறிவைப் பெறுவதற்கும், அவர்களின் ஆர்வம், சிந்தனைத்திறன் மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்ப்பதற்கும் இவ்வசதி பெரிதும் உதவும் இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.1.8 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.








