விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தாயில்பட்டி ,வனமூர்த்தி லிங்கபுரம், சுப்பிரமணியபுரம், இறவார்பட்டி, வெற்றிலை யூரணி, மடத்துப்பட்டி, மண்குண்டாம்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் நேற்று இரவு 7 மணி அளவில் மின்தடை செய்யப்பட்டது.

ஒன்று அறை மணி நேரத்திற்கு மேல் ஆகியும் தொடர்ந்து மின் சப்ளை வழங்கப்பட வில்லை. இந்த அறிவிக்கப்படாத இரண்டாவது நாளாக மின்தடையால் டியூசன் படிக்கும் மாணவ, மாணவிகள், மற்றும் வியாபார நிறுவனங்கள் பட்டாசு கடை வியாபாரிகள் சிரமப்பட்டனர். ஏழாயிரம் பண்ணை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கீழச்செல்லையாபுரம், முத்தாண்டியாபுரம், தூங்கா ரெட்டிபட்டி, கிருஷ்ணாபுரம், சிவசங்குபட்டி, எலுமிச்சங்காய் பட்டி, உள்ளிட்ட கிராமங்களிலும் மின்தடை செய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர் .
மேலும் ஏழாயிரம் பண்ணை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான உயர்ரக மெழுகு தீப்பெட்டி உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இப்பகுதியிலும் திடீரென அறிவிக்கப்படாத மின்தடையால் தீப்பெட்டி உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது. மின்தடை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போன் செய்தாலும் போன் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்ததால் புகார் செய்ய முடியாமல் சிரமப்பட்டனர். சாரல் மழை, இடி ,மின்னல், ஏதும் இல்லாத நிலையில் மின்தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.









