தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 2026-ஆம் ஆண்டிற்கான “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் இன்று (09.09.2026) மிகச் சிறப்பாகத் தொடங்கின.

மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கி, விளையாட்டு ஜோதியை ஏற்றி வைத்து முறைப்படி போட்டிகளைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மூவர்ண பலூன்களை வானில் பறக்கவிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், களத்தில் இறங்கி வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து உற்சாகப்படுத்தினார்.

இப்போட்டிகள் இன்று தொடங்கி வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி வரை பல்வேறு மைதானங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளன.
பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளின் கீழ் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, சிலம்பம், நீச்சல், டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.

இப்போட்டிகள் அனைத்தும் மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கம், அமெரிக்கன் கல்லூரி, லேடி டோக் பெருமாட்டிக் கல்லூரி, ஸ்ரீராம் நல்லமணி மேல்நிலைப்பள்ளி, ஓசிபிஎம் மேல்நிலைப்பள்ளி மற்றும் சோலைமலை பொறியியல் கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் அட்டவணைப்படி நடைபெறுகின்றன.
மாவட்ட அளவில் நடைபெறும் தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.3,000/-, இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.2,000/-, மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.1,000/- என பரிசுத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பரிசுத்தொகையானது வெற்றியாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடி
இப்போட்டிகளில் இணையதளம் வழியாக முறைப்படி முன்பதிவு செய்த வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் தங்களது கல்வி நிறுவன அடையாள அட்டை (ID Card) அல்லது Bonafide சான்றிதழையும், அரசு ஊழியர்கள் தங்களின் அலுவலக ஒப்புதல் கடிதம் மற்றும் அடையாள அட்டையையும், பொதுப்பிரிவினர் இருப்பிடச் சான்றிதழையும் கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும்.

மேலும், அனைத்துப் பிரிவினரும் தங்களின் ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலைத் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும். போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் தங்களுக்குரிய போட்டி அட்டவணைப்படி காலை 6.30 மணிக்கே அந்தந்த விளையாட்டு மைதானங்களுக்கு நேரில் வருகை தந்து ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.அ.முருகன் அவர்கள், அரசுத் துறை அலுவலர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.








