நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக எம்பிக்கள் குழு இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் இன்று சந்திக்கின்றனர்.
நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழகம் தொர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு அடுத்தக்கட்டமாக நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவையும் தமிழக அரசு அமைத்தது.
இக்குழுவும் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய்ந்து அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தது.சட்டசபையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதனிடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி தமிழக எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த நிலையில், திமுக, காங்கிரஸ், இடதுசாரி, மதிமுக மற்றும் அதிமுக கட்சிகளின் எம்.பிக்கள் அடங்கிய குழு, நேற்று நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மனுவை குடியரசு தலைவரிடம் அளித்தனர்.
அதனை தொடர்ந்து இந்த குழு இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்திக்கிறது. நண்பகல் 12 மணிக்கு நடைபெற இருக்கும் இந்த சந்திப்பின் போது, நீட்தேர்வுக்கு விலக்கு கோரி மனு அளிக்க இருக்கிறது.