எழாஅஆகலின், எழில் நலம் தொலைய
அழாஅதீமோ, நொதுமலர் தலையே!-
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த
பகழி அன்ன சேயரி மழைக் கண்,
நல்ல பெருந் தோளோயே! கொல்லன் எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி
மயில் அறிபு அறியாமன்னோ;
பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே.
பாடல் – குறிஞ்சி பாடியவர் – கபிலர்.

பொருளுரை:
தினைப் புனங்காவலையுடைய மழவர் ஆண்டுத் தின்றழிக்க வந்த பன்றி முதலாய விலங்குகளை யெய்து கொன்று மீட்டும் அவற்றினின்று பறித்தெடுத்த அம்புபோன்ற செவ்வரி பரந்த குளிர்ச்சியையுடைய கண்ணையும், நல்ல பெரிய தோளையும் உடையாய்!; கொல்லனது உலைக்களத்து அடிக்கும் இரும்பின் பொறி சிதறுமாறு போலச் சிறிய பலகாயையுடைய வேங்கையின் மலர்கள் உதிர்கின்ற; உயர்ந்த மலையினுள்ள கூட்டிலிருக்கும்; மயில்கள் தாம் அறிதலைப் பசிய புறத்தினையுடைய கிளிகள் அறியாவாய்; நெருங்கிய தினைக் கதிர்களைக் கவர்ந்து போகா நின்றன. அதனால் அக்கதிர்களும் அழிந்துபோகின்றன காண்; எழா அய்! அவற்றை ஓட்டவேண்டிய நீ இவ்விடத்திருந்தும் எழுந்தாயல்லை! ஆகலின் எழில் நலந்தொலைய நொதுமலர் தலை அழா. அங்ஙனம் எழாதிருப்பினும் நின் அழகிய நலமெல்லாங் கெடும்படியாக அயலாரிருக்கும் இவ்விடத்து அழாதிருத்தலையேனுஞ் செய்வாயாக!;









