கோவை, சின்ன தடாகம் பகுதியில் வழக்கம் போல் பறவைகள் நடமாட்டம் இருந்த நிலையில், அங்கு உள்ள மரத்தில் இருந்து காகம் ஒன்று திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து உள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அருகில் சென்று பார்த்த போது, அந்த காகம் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.

இந்தச் சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே, அதைச் சுற்றி உள்ள பகுதியிலும் ஆங்காங்கே ஒவ்வொரு காகங்களாகக் கீழே விழுந்து இறந்து கிடந்து உள்ளன. இதேபோல் அப்பகுதியில் மட்டும் 6-க்கும் மேற்பட்ட காகங்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து கிடப்பைக் கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

காகங்கள் ஏதேனும் அரிய வகை பறவைக் காய்ச்சல் அல்லது நோய் தாக்கி இறந்தனவா ? அல்லது யாரேனும் உணவில் விஷம் வைத்துக் கொன்று உள்ளனரா ? என்பது குறித்துத் தெளிவான விளக்கம் பெற வேண்டும்.
எனவே, வனத்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு இறந்து கிடந்த காகங்களைக் கைப்பற்றி உரிய பிரேத பரிசோதனை (Autopsy) செய்ய வேண்டும் என்றும், இதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து மக்களுக்கு ஏற்பட்டு உள்ள அச்சத்தைப் போக்க வேண்டும் என்றும் தடாகம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.




