கோவை மாவட்டத்தைப் “போதைப்பொருள் இல்லாத கோவை” மண்டலமாக மாற்றும் நோக்கில், கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள தனியார் விடுதிகள் மற்றும் அறைகளில் 400-க்கும் மேற்பட்ட போலீஸார் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் K. ரெட்டி, உத்தரவின் பேரில், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, கோவில்பாளையம், சூலூர் மற்றும் செட்டிபாளையம் ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 30 கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், கல்லூரிகளுக்கு வெளியே தனியாக அறைகள் மற்றும் வீடுகள் எடுத்துத் தங்கி உள்ள 50-க்கும் மேற்பட்ட இடங்களைக் கண்டறிந்து போலீஸார் ஒரே நேரத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையானது 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் (ADSP), பேரூர், கருமத்தம்பட்டி மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் (DSP) தலைமையில் நடைபெற்றது. 10 காவல் ஆய்வாளர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுமார் 400 காவல்துறையினர் இச்சோதனையில் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டனர்.
மாணவர் அறைகளில் நடத்தப்பட்ட இந்த தீவிர சோதனையின் முடிவில்,
கஞ்சா வைத்திருந்ததாக 1 வழக்கும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்து இருந்ததாக 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
மேலும், முறையான ஆவணங்கள் இன்றிப் பயன்படுத்தப்பட்ட 14 வாகனங்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கல்லூரி மாணவர்கள் இடையே போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையைத் தடுக்கும் பொருட்டு, கல்லூரிகளைச் சுற்றி உள்ள பகுதிகள் மற்றும் தனியார் விடுதிகளில் இதுபோன்ற திடீர் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட காவல்துறை எச்சரித்து உள்ளது.

மேலும், போதைப் பொருள் விற்பனை அல்லது பயன்பாடு குறித்துப் பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரியவந்தால், கோவை மாவட்ட காவல்துறையின் “நிழல்” (NIZHAL) QR Code மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ எண்கள் மூலமாகவோ உடனடியாகத் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் முற்றிலும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.




