மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டி நோக்கி சுமார் 30 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் அருகே வந்தபோது பேருந்தின் பின்பக்க பகுதியில் இருந்து கடும் புகை கிளம்பியது.

இதை அறியாத ஓட்டுநர் தொடர்ந்து பேருந்தை இயக்கிய நிலையில் வாடிப்பட்டி பழைய நீதிமன்றம் அருகில் பேருந்து வந்தபோது பேருந்தின் கீழ் பக்க டயர் அருகில் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டு பேருந்தை நிறுத்திய நிலையில், பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். மேலும் அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி பேருந்தில் பற்றிய தீயை அணைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.






