கோவை, ரேஸ்கோர்ஸ் மற்றும் திருச்சி சாலை பகுதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் 4 பெண்கள் ஆபத்தான முறையில் பயணித்து ரீல்ஸ் (Reels) எடுத்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரின் முதன்மைச் சாலைகளான காந்திபுரம் செம்மொழிப் பூங்கா சாலையில், ஒரே இருசக்கர வாகனத்தில் 4 இளம் பெண்கள் எந்தவிதப் பயமும் இன்றி பயணித்து உள்ளனர். அதில் வாகனம் ஓட்டும் பெண்ணிற்குப் பின்னால் மூவர் அமர்ந்து இருக்கின்றனர். மேலும், அந்தப் பயணத்தின் போது “அவளும் ஓட்டி பழகிட்டா… நாங்களும் உட்கார்ந்து பழகிட்டோம்…” என்ற வாசகத்தை பதிவு செய்து உள்ளனர். அதைச் செல்போனில் ரீல்ஸாகப் பதிவு செய்து இன்ஸ்ட்டா போன்ற சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு உள்ளனர்.
போக்குவரத்து விதிகளை முற்றிலும் மதிக்காமல், தலைக்கவசம் (Helmet) அணியாமலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான நபர்களைச் (Triple/Quadruple riding) ஏற்றிச் சென்றும் எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் அதிவேகமாகப் பரவியது.
இதனைப் பார்த்த நெட்டிசன்களும், இளைஞர்களும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“நாங்கள் இருசக்கர வாகனத்தில் இருவருக்குப் பதிலாக மூவர் சென்றாலே அல்லது ஹெல்மெட் போடாவிட்டாலே கேமரா மூலம் கண்டறிந்து அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவல் துறையினர், இதுபோன்ற ஆபத்தான ரீல்ஸ் வீடியோக்களை எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்களா ?” என இளைஞர்கள் தங்களது ஆதங்கத்தையும் குமுறலையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

பொதுமக்களின் உயிருக்கும், பிற வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகச் சாலையில் இதுபோன்று விதிகளை மீறி ரீல்ஸ் மோகத்தில் ஈடுபடுபவர்கள் மீது கோவை போக்குவரத்து காவல் துறையினர் உடனடியாகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.





