உலகத் தமிழராய்ச்சி கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் நளங்கிள்ளி, தெம்மாவூர் நந்தன் மற்றும் ஆய்வாளர் அருள்முத்துக்குமரன் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வட்டத்தில் வெள்ளனூர் கிராமத்தில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரமுடைய நாயனார் கோயில் கள ஆய்வில் புத்தர் சிலையை கண்டுபிடித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வட்டம் வெள்ளனூர் கிராம கச்சேரியின் தென் புறத்தில் புத்தர் உருவச்சிலை ஒன்று இருக்கிறது என்று பௌத்தமும் தமிழும் என்ற நூலில் மயிலை சீனி வெங்கடசாமி கூறுகிறார்.
முன்னாள் இந்திய தொல்லியல் துறை இயக்குநர், தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆலோசகர் முனைவர் தயாளன் அவர்கள் இச்சிலை 13 – 14 நூற்றாண்டு அல்லது அதற்கும் பிந்தைய காலத்தை சேர்ந்த புத்தர் சிலையாக இருக்கலாம் என்கிறார். மேலும் சிலையின் இருபுறமும் போதிசத்துவர்கள் சூழ இடம்பெற்றுள்ளனர். ஆனால், காலத்தால் அவற்றின் விவரங்கள் தேய்ந்து போயுள்ளன.

கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் புத்தரின் சிற்பம் பற்றி குறிப்பிடும்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் சமண மற்றும் பௌத்த சமயங்கள் மிகப் பழங்காலத்தில் தழைத்தோங்கி இருந்தன. சமணச் சான்றுகள் இங்கு பரவலாகக் காணப்பட்டாலும், பௌத்தத்தின் தடயங்கள் மிகவும் அரிதாகவே உள்ளன. தற்போது வெள்ளனூர் கிராமத்தில் கிடைத்த புத்தர் சிலையானது இப்பகுதியில் பௌத்தமும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு செலுத்தியுள்ளது தெளிவாகிறது. அதேசமயம் காலத்தால் சிலை தேய்மானம் அடைந்துள்ளதால் பெரும்பாலானவர்கள் சமண தீர்த்தங்கள் என்றே புரிந்து கொள்வர். புத்தர் சிலையானது கிராமத்தின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து கோயிலில் எடுத்து வைத்துள்ளதால் மயிலை சீனு வேங்கடசாமி குறிப்பிடும் புத்தரின் சிலை இதுவாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகின்றனர்.




