புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் பகுதியில் புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தயார் செய்யும் சமையல் கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த சமையல் கூடத்தில் நாள்தோறும் 3,000 மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தயார் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தயார் செய்யும் சமையல் கூடத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மீனாட்சி சுந்தரம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பள்ளி மாணவர்களுக்காக தயார் செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார்.

மேலும் அங்கு சமையல் பணியில் ஈடுபடும் ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் சுவையாகவும் மதிய உணவு தயார் செய்ய வேண்டும் என்று சமையல் செய்யும் ஊழியர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மீனாட்சி சுந்தரம் அறிவுறுத்தினார்.




