விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுமங்கலி
திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மலர் மாலைகள், எலுமிச்சை பழ மாலைகளை காணிக்கையாக செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர். பெண்கள் எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றியும்,மண் விளக்கில் நெய் தீபம் ஏற்றியும் வேண்டுதலை நிறைவேற்றினர்.

மாலையில் மாரியம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விசேஷ தீபாராதனை நடைபெற்றது. பின்னர் 238 சுமங்கலி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.திரளான பெண்கள் மாவிளக்கு பூஜை நடத்தியும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். இதேபோல் சொக்கலிங்கபுரம் மாரியம்மன் கோவில், இளந்தோப்பு காளியம்மன் கோவில், ஆவாரம்பட்டி காளியம்மன் கோவில், தோப்புப்பட்டி முத்துமாரியம்மன் கோயில்களிலும் ஆடி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது.





