மதுரை மாநகர் கடச்சனேந்தல் பகுதியை சேர்ந்த நாகரத்தினம் என்பவர் நேற்று மதியம் தனது பேரனுக்கு வெள்ளி கொலுசு வாங்குவதற்காக தெற்கு ஆவணி பகுதியில் உள்ள நகைகடை பஜார் பகுதிக்கு வந்துள்ளார். அங்குள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்த நாகரத்தினம் பாக்கெட்டில் வைத்த பின்னர் தனது போனை எடுத்து பேசிய போது 5 ஆயிரம் ரூபாய் பணம் கீழே விழுந்துள்ளது. இதனை கவனிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதனையடுத்து அங்கு பணியில் இருந்த பிங்க் பேட்ரோல் பெண் காவலர் தீபிகா பைக் நிறுத்துமிடத்தில் கீழே பணம் ஆங்காங்கே சிதறிகிடந்துள்ளதை பார்த்து அதனை எடுத்துள்ளார். அதில் 4900 ரூபாய் இருந்துள்ளது. இதையடுத்து அருகில் உள்ள போக்குவரத்து காவல்துறையினரிடம் இது தொடர்பாக கூறியுள்ளார்.
பணத்தை உரியவரிடம் எப்படியாவது ஒப்படைக்க வேண்டும் என நினைத்த காவல்துறையினர் போக்குவரத்து ஆய்வாளர் ஷோபானா தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர் பணம் கிடந்த இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 4 பைக்குகளின் பதிவெண்களை சிசிடிவி கேமிராக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலமாக எடுத்து ஒவ்வொரு வாகன உரிமையாளர்களுக்கு போன் செய்து விசாரித்துள்ளனர்.
அப்போது நாகரத்தினத்தையும் தொடர்பு கொண்டு பேசியபோது தனது பணத்தை தவறுவிட்டுவிட்டதாக கவலையுடன் கூறியுள்ளார்.
இதையடுத்து் நாகரத்தினத்திற்கு ஆறுதல் தெரிவித்து பணத்தை காவலர் எடுத்து வைத்திருப்பதாகவும் அதனை பெற்றுகொள்ள வருமாறும் கூறியதோடு ஏடிஎம்மில் பணம் எடுத்தது மற்றும. அவரது பணம் தானா என விசாரணை நடத்திய பின்னர் காவலர் தீபிகா மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஷோபனா ஆகியோர் பணத்தை தொலைத்த இடத்தில் வைத்து நாகரத்தினத்திடம் பணத்தை ஒப்படைத்தனர்.

பணத்தை தொலைத்துவிட்டு மனவேதனையில் இருந்த நாகரத்தினத்தை தொடர்புகொண்டு காவல்துறையினர் பணத்தை ஒப்படைத்தத்தால் மன மகிழ்ச்சியில் பெண் காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
மதுரையில் சாலையில் கிடந்த பணத்தை எடுத்து பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக தொலைத்த நபரை கண்டறித்து பணத்தை ஒப்படைத்த பெண் காவல்துறையினரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.




