காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு அருகே இயங்கி வரும் அசைவக் கடையை அகற்றக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், நாளை காரைக்கால் நகராட்சி ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதால், திட்டமிடப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது.

காரைக்கால் நகராட்சி ஆணையர், விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் மற்றும் அசைவக் கடை உரிமையாளர் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது. இதன் அடிப்படையில், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து, கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

இந்த கையெழுத்து இயக்கத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் விஜயன், பாஜக மாவட்டத் தலைவர் முருகதாஸ், பாஜக மாநிலச் செயலாளர் துரைசேனாதிபதி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் தற்போது போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும், கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் தெரிவித்தனர்.





