மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி பெரும்பாலும் விவசாயம் சார்ந்த மிகவும் பின் தங்கிய பகுதியாக உள்ளது.,

தென்னிந்திய ஜாலியன் வாலாபாக் படுகொலை எனப்படும் பெருங்காமநல்லூர் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின் இந்த பகுதி மக்களின் கல்வியை மேம்படுத்த ஆங்கிலேயேர் ஆட்சி காலத்திலேயே கள்ளர் சீரமைப்புத்துறை என்ற துறையை உருவாக்கி 100 க்கும் அதிகமான கள்ளர் பள்ளிகள் உருவாகி அதன் மூலம் பலரும் கல்வியால் முன்னேற்றமடைந்தனர்.,
காமராஜரின் ஒரு கிராமத்திற்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசு பள்ளிகளின் காரணமாகவும் கிராமப்புற மக்களும் கல்வியால் மாறி வந்தனர்.,
தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் கிராமப்புற பகுதிகளில் இயங்கும் அரசு துவக்கப்பள்ளிகளில் மாணவ மாணவிகள் சேர்க்கை படிப்படியாக குறைந்து இன்று பள்ளிகள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.,

அந்த வகையில் உசிலம்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கிராமப்புற பகுதிகளான சிரங்கம்பட்டி, தாதம்பட்டி, ஓனாப்பட்டி கிராமங்களில் இயங்கி வந்த மூன்று அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் மாணவர் பற்றாக்குறையை காரணம் காட்டி இன்று மூடப்பட்டது.,
அப்பள்ளிகளில் பயின்ற ஒரிரு மாணவ மாணவிகளும் அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்., ஆசிரியர்களுக்கும் கடந்த 2 ஆம் தேதியே பணி மாறுதல் வழங்கப்பட்டு நிரந்தரமாக இக் கிராமங்களில் இயங்கி வந்த பள்ளிகள் மூடப்பட்டது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.,
கடந்த சட்டமன்ற தேர்தல் வரை தாதம்பட்டி, ஓனாப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த பள்ளிகளில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்ட சூழலில், அடுத்து வரும் தேர்தல்களில் இந்த கிராம மக்கள் அடுத்த அடுத்த கிராமங்களுக்கு சென்று வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.,
மாணவ மாணவிகளின் சேர்க்கையை அதிகரிக்க அரசு முயற்சி எடுப்பதோடு, ஆரம்ப பள்ளி முதல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் வேலைவாய்ப்பை உறுதி செய்வதோடு, மூடப்பட்ட பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.,





