தமிழ்நாடு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுக்கோட்டை முத்துமீனாட்சி மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார். அவருடன் முத்துமீனாட்சி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் G. பெரியசாமியும் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி பிரேம்குமார் ராஜன் , அமைச்சர் மற்றும் பொதுமக்களை வரவேற்று உரையாற்றினார்.

தொடர்ந்து பேசிய மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் G. பெரியசாமி , முத்துமீனாட்சி மருத்துவமனை தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், பல்வேறு உயர்தர அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ சேவைகளை காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு தொடர்ந்து வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
இம்மருத்துவ முகாமில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை சிறப்பு மருத்துவர் டாக்டர் சிவப்பிரகாஷ், இருதய மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சரவணன், இருதய நோய் நிபுணர்கள் டாக்டர் ஆதில் மற்றும் டாக்டர் சுதர்சனன், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜலராம், சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜா, மூளை நரம்பியல் மற்றும் முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரமேஷ் ராஜா, எலும்பு மற்றும் மூட்டு மருத்துவர் டாக்டர் நவீன் குமார், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் துர்கா தேவி, நுரையீரல் மருத்துவர் டாக்டர் இளவரசி, தோல் மற்றும் பால்வினை நோய் மருத்துவர் டாக்டர் ஜெயலட்சுமி மற்றும் பல் மருத்துவர் டாக்டர் ரயீசா பர்வீன் ஆகியோர் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.

இந்த மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மேலும், முத்துமீனாட்சி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் தொடங்கி வைத்தார். இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் தன்னார்வத்துடன் இரத்ததானம் செய்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவில், முத்துமீனாட்சி மருத்துவமனையின் பொது மேலாளர் வினோத்குமார் நன்றி உரையாற்றினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முத்துமீனாட்சி மருத்துவமனையின் மக்கள் தொடர்புத் துறையினர் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.





