கோவை சிறுதுளி அமைப்பு சோழிங்கநல்லூர் ஏரியை வெற்றிகரமாக மறுசீரமைப்பு செய்துள்ளது.

கடந்த 23 ஆண்டுகளாக நீர்நிலைகள் புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் சமூக மேம்பாட்டு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சிறுதுளி அமைப்பு, இன்ஃபோசிஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிதி உதவியுடன் சென்னை சோழிங்கநல்லூர் ஏரி மறுசீரமைப்பு திட்டத்தை நிறைவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி , நீர்வளத் துறை மற்றும் பிற அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. .
இந்த மறுசீரமைப்பு பணிகளின் மூலம் ஏரியில் தேங்கியிருந்த மண் அகற்றப்பட்டு, நீர் சேமிப்பு திறன் சுமார் 150 மில்லியன் லிட்டரிலிருந்து 300 மில்லியன் லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அகற்றப்பட்ட மண்ணை பயன்படுத்தி ஏரி கரைகள் பலப்படுத்தப்பட்டதுடன், மழைநீர் வருகை மற்றும் நீர் சேமிப்பை மேம்படுத்தும் வகையில் ஷட்டர் அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது.

திட்டத் தொடக்க விழாவில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பி. சரவணன் தலைமை விருந்தினராக பங்கேற்றார். சென்னை மாநகராட்சி (தெற்கு) பிராந்திய துணை ஆணையர் அஃப்தாப் ரசூல், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சென்னை வளர்ச்சி மைய தலைவர் அனில் குமார், மூத்த துணைத் தலைவர் நிலாத்ரி பிரசாத் மிஷ்ரா உள்ளிட்ட நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர். சிறுதுளி அமைப்பின் தலைவர் டாக்டர் எஸ்.வி. பாலசுப்ரமணியம், நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், உள்ளூர் பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




