தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான மு கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு காரைக்காலில் பல்வேறு இடங்களில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு காரைக்கால் சட்டமன்ற உறுப்பினர் நாஜிம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் மற்றும் திமுக விவசாய அணி அமைப்பாளர் பிரபு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டர் கலைஞர் பட்ட மேற்படிப்பு மையத்தில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதியின் சமூக மற்றும் அரசியல் பங்களிப்புகளை நினைவுகூர்ந்தனர்.



