தமிழக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தொகுதிகளில் ஒன்று புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்று எட்டு மாதங்களுக்கு முன்பே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி அறிமுகப்படுத்தப் பட்டிருந்தார்.

உரிய காலத்தில் திமுக வேட்பாளர் டாக்டர் முத்துராஜாவும் அறிமுகப்படுத்தப் பட்டிருந்தார். அதிமுக விற்கு தான் இந்த தொகுதி கிடைக்கும் என்று நம்பி இருந்த நிலையில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது. அதன் காரணமாக அந்தக் கட்சிக்குள் உள்ள கோஷ்டி பிரிவினைகளின் காரணமாக வேட்பாளர் தேர்வு வேட்பு மனு தாக்கல் செய்யும் நிலையில் தான் ராமச்சந்திரன் என்பவர் அறிவிக்கப்பட்டார்.
இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக முத்தரையர் சமூகம் இருக்கும் நிலையில் வேறு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எல்லா கட்சிகளிலும் சீட் கொடுப்பதை அந்த இன மக்கள் விரும்பவில்லை என தெரிய வந்தது. இந்த நிலையில் தான் வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சி ஆகியவற்றின் நிறுவனரும் தலைவருமான வழக்கறிஞர் கருப்பையா புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு சுயேட்சை வேட்பாளராக களத்தில் இறங்கி இருக்கிறார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது புதுக்கோட்டை தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் எமது இன மக்களுக்காக அவர்களது பிரச்சனைக்காக தலைவர்கள் போராடி இருக்கிறார்கள் என்றால் மிகவும் குறைவு தான். ஆனால் நான் பல பிரச்சினைகளை கையில் எடுத்துக் கொண்டு போராடி இருக்கிறேன். குறிப்பாக எம் சமுதாய மக்களுக்காக 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக நான் போராடினேன். அதனால் பயன் இருந்ததா என்று பார்த்தால் பயனில்லாமல் போய்விட்டது. காரணம் நான் வீதியில் இறங்கி போராடினாலும் இங்கு உள்ள மக்களுக்கு கேட்கும் செய்தியாளர்களுக்கு கேட்கும் அதிகாரிகளுக்கு கேட்கும் ஆனால் அதற்கு மேற்கொண்டு எதுவும் பயன் கிடைக்கவில்லை.

இதுவே நான் சட்டமன்றத்திற்கு சென்று அங்கிருந்து குரல் கொடுத்தால் நிச்சயமாக எனது குரல் அங்கு ஒலிக்கும். நிச்சயமாக எமது மக்கள் பிரச்சனைகள் தீரும். இந்தத் தொகுதியில் இருக்கும் எம் சமுதாய மக்கள் 80 ஆயிரம் பேரை நம்பி களத்தில் சுயேட்சையாக ரம்பம் சின்னத்தில் போட்டியிடுகிறேன். நிச்சயமாக சட்டமன்றத்தில் பேசி அவர்களது உரிமையை பெற்று தருவேன்.
மேலும் எம் சமுதாய மக்களுக்காக மட்டுமல்ல அனைத்து சமுதாய மக்களுக்காகவும் அவர்களது உரிமைகளையும் நலன்களையும் பெற்று தருவேன் என்றார். இப்போது தீவிரமாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.




