தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில். தக்கலை உட்கோட்ட பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பை உணரும் வகையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னேற்பாடு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தவும், அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யவும் ராணுவப் படையினர் மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து 86 பட்டாலியன் சேர்ந்த இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் (BSF) 90 பேர் வருகை தந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS.,அவர்களின் உத்தரவு படி, தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில் எல்லை பாதுகாப்பு படை உதவி தளவாய் ரஜினீஸ் கட்சாப், ஆய்வாளர் அஜய் சிங், காவல் ஆய்வாளர்கள் பாரதிராஜா, காளிராஜா, துப்பாக்கி ஏந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் சேர்ந்து அழகியமண்டபத்தில் இருந்து தொடங்கி வட்டம் பெரியநாயகி தேவாலயம் வரை கொடி அணிவகுப்பு ஊர்வலமாக சென்றனர்.
பொதுமக்களிடையே அச்சத்தை போக்கி பாதுகாப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைதியாக ஊர்வலமாக சென்றனர்.



