காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட ஊழியபத்து பகுதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம்.

இவ்வாலயத்தின் ஆண்டு திருவிழாவில் கடந்தாண்டு மற்றொரு சமூகத்தினர் வசிக்கும் பகுதி வழியாக சாமி சென்று வர அனுமதிக்காத நிலையில் அப்போதிருந்த துணை மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் பொது வழியில் சாமி செல்ல எந்த தடையும் இல்லை எனவும் சாமியுடன் பத்து நபர்கள் மட்டும் சென்று வரலாம் என உத்தரவிட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த ஆண்டு திருவிழாவின் வீதியுலா நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்ட நபர்களை மீறி அதிகமானோர் சாமி உடன் வந்ததாகவும் இதனால் இரு தரப்பினரையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இன்று ஊழியபத்து மக்கள் ஊர் முழுவதும் கருப்பு கொடி ஏற்றி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் பேனர் வைத்து முழக்கங்களையும் எழுப்பினர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனும் இல்லாத நிலையில், தேர்தல் பணியில் இருந்த வட்டாட்சியர் பொய்யாத மூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பினரிடமும் பேசி சுமுகமான தீர்வு எட்டப்படும் என வட்டாட்சியர் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிடுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.



