விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜாபுரத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பள்ளிக்கு சொந்தமான பஸ்ஸில் மாணவ, மாணவிகள், சென்று வருகின்றனர்.

நேற்று வழக்கம்போல் பள்ளி மாணவ, மாணவியர்களை அழைத்து வருவதற்காக தாயில்பட்டியலிலிருந்து வெற்றிலையூரணி வழியாக சென்று கொண்டிருந்த போது கீழதாயில்பட்டி அருகே உள்ள வளைவில் எதிர்பாராத விதமாக பஸ்ஸின் வாசல் படி அருகே நின்று கொண்டிருந்த கிளீனர் சிவகாசியை சேர்ந்த சிவகுமார் (வயது 53) தடுமாறி விழுந்ததாக தெரிய வருகிறது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்து சிவக்குமார் மகன் சரவண பாலாஜி வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்ததன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன பஸ் டிரைவர் ரிசர்வ் லைனைச் சேர்ந்த பரமசிவம் (வயது 38) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



