• Thu. Feb 19th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

25 கோடி கடன் தருவதாகக் கூறி மோசடி., 2 நாள் காவல்துறை விசாரணைக்கு கோவை நீதிமன்றம் அனுமதி !!!

BySeenu

Feb 19, 2026

கோவை நேரு நகரை சேர்ந்தவர் சென்னிமலை (வயது 57). இவர் கோவையில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தை அவர் மேம்படுத்த முடிவு செய்தார். அதற்கு கோடிக்க ணக்கில் பணம் தேவைப்பட்டது.

இதை அடுத்து அவருக்கு சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த செந்தில்வாசன் (51) என்பவர் அறிமுகம் ஆனார். அவரிடம் சென்னிமலை ரூ.25 கோடி கடன் வாங்கி தரும்படி கேட்டு உள்ளார். அதற்கு அவர் தன்னிடம் பண முதலீட்டாளர்கள் பலர் இருப்பதாக கூறியதுடன் கண்ணன் என்பவரை அறிமுகப்படுத்தினார். அவர் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் கடன் வாங்கி கொடுக்கிறேன் என்று கூறி உள்ளார். சில நாட்கள் கழித்து கண்ணன் உள்பட 5 பேர் சேர்ந்து ரூ.25 கோடி கடன் கிடைத்து விட்டது என்றும், அதற்கான வரைவோலையை (டி.டி.) காட்டி உள்ளனர்.

இந்த கடனுக்கான கமிஷன் தொகையை கொடுத்ததும், சில ஆவணங்களை கொடுக்க வேண்டும். அதன் பின்னர் அந்த தொகையை கொடுத்து விடுவோம் என்று கூறி உள்ளனர். அதை நம்பி சென்னிமலை ரூ.67 லட்சத்தை கொடுத்து உள்ளார். தொடர்ந்து கடன் கொடுப்பதால் அது தொடர்பாக பொள்ளாச்சி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அங்கு வந்து விடுங்கள், பதிவு முடிந்ததும் நாங்கள் பணத்தை கொடுத்து விடுகிறோம் என்று கூறி உள்ளனர்.

இதை அடுத்து சென்னிமலை கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி பொள்ளாச்சி பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் அங்கு அவர்கள் வரவில்லை. உடனே அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, அதே மாதம் 12-ந் தேதி காந்திபுரம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்னிமலையை வர சொன்னார்கள். ஆனால் அங்கும் அவர்கள் வரவில்லை. அப்போது தான் அவருக்கு செந்தில்வாசன் உள்பட 5 பேர் சேர்ந்து கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.67 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் பீளமேடு போலீசார் செந்தில்வாசன், முருகன், அன்புசெல்வன், கதிரேசன், அந்தோணி ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன் செந்தில்வாசனை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் சென்னையில் நடந்த மோசடி வழக்கில் சத்திரிய சான்றோர் படை கட்சி நிறுவனர் ஹரி நாடாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கோவையை சேர்ந்த சென்னிமலை என்பவரிடம் முருகன் என்ற பெயரில் கடன் வாங்கி தருவதாக ரூ.67 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சென்னைக்கு சென்று ஹரி நாடார், சென்னையை சேர்ந்த சுந்தரேசன் என்கிற கதிரேசன் ஆகியோரை கைது செய்தனர். அத்துடன் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தென்காசியை சேர்ந்த அந்தோணி, அன்புசெல்வன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இதற்கு இடையே, ஹரி நாடார், கதிரேசன் ஆகியோரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பீளமேடு போலீசார் கோவையில் உள்ள 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தது.

இதனால் போலீசார் ஹரி நாடார் மற்றும் கதிரேசன் ஆகியோரை சென்னையில் இருந்து பாதுகாப்பாக கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அந்த மனு மாஜிஸ்திரேட்டு அப்துல் ரகுமான் முன்னிலையில் விசாரணை நடந்தது. இதை அடுத்து 2 பேருக்கும் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். இதை அடுத்து போலீசார் 2 பேரையும் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.