கேரளாவுக்கு கடத்த முயன்ற ஐந்து டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்ததுடன், இரண்டு பேரை கைது செய்தனர்.

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கவுண்டம்பாளையம் போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.
இதை அடுத்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது இடையர்பாளையம் அண்ணா நகர் பகுதியில் இரண்டு சரக்கு வேன்கள், ஒரு சரக்கு ஆட்டோவில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. உடனே உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் அந்த வாகனங்களை சுற்றி வளைத்து பிடித்து அதற்குள் சோதனை செய்தனர்.

அதில் 5 டன் ரேஷன் மூட்டைகள் இருந்ததையும், அதை கேரளாவிற்கு கடத்த முயற்சி செய்வதும் தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் 5 டன் ரேஷன் அரிசி மற்றும் மூன்று வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்த முயன்ற இடையர்பாளையம் நீலிம்மன் நகரைச் சேர்ந்த குணசேகரன், பீகார் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் குமார் ஆகியோரே போலீசார் கைது செய்தனர்.










