கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே, நான்காவது நாளாக நடைபெறும் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பத்தாண்டு பணி முடித்த தகுதியான ஊழியர்களுக்கு 50 சதவீத பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
மேலும், கோடை விடுமுறைக்கான பிழைப்பூதியம், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி, தேசிய மருத்துவ காப்பீடு, 12 மாத மகப்பேறு விடுப்பு ஆகிய கோரிக்கைகளையும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இன்று காலை நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தை கைவிட மறுத்ததால், காவல்துறையினர் 500-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

மாலை 5.30 மணி அளவில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால், விடுவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் வட்டாட்சியர் அலுவலகம் அருகே திரண்ட ஊழியர்கள், செல்போன்களின் டார்ச் லைட்டுகளை ஒளிரவிட்டு, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.











