• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் பேட்டி..,

ByKalamegam Viswanathan

Dec 16, 2025

மதுரை விமான நிலையத்தில் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் செய்தியாளர்களை சந்திப்பில் கூறுகையில்:

இண்டிகோ விமான சேவை தாமதம் ரத்து குறித்த கேள்விக்கு:

மதுரை விமான நிலையத்தை பொருத்தவரை அட்டவணையில் எந்த வித மாற்றமும் இல்லை. மதுரை விமான நிலையத்தில் சென்னை, பெங்களூர் என ஏ.டி.ஆர். விமானங்கள் தான் உள்ளது ஏ.டி.ஆர். விமானங்கள் அதிகமாக ரத்து செய்யப்படவில்லை. பெரிய விமானங்கள் மட்டும் தான் சேவை பாதிக்கப்பட்டிருந்தது மற்றபடி பெரிதாக எந்த வித ரத்தோ அல்லது தாமதமோ இல்லை.

ஸ்பைஸ் ஜெட் துபாய் விமான சேவை அடிக்கடி பாதிப்பு ஏற்படுவது குறித்த கேள்விக்கு:

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளது விமானத்தை ஏற்பாடு செய்வதில் அவர்களுக்கு சிக்கல்கள் உள்ளது. மதுரை விமான நிலையத்தை பொருத்தவரை அவர்களுக்கு நாங்கள் முழு ஆதரவளித்துள்ளோம். அவர்கள் கேட்கும் நேரத்தில் தாமதமானாலும் சேவை வழங்கப்பட்டிருந்தது. விமான நிலையம் தற்போது 24 மணி நேர சேவை இருப்பதால் அவர்களுக்கு எவ்வளவு தாமதம் ஆனாலும் நாங்கள் சேவைக்கு தயாராக உள்ளோம். அந்த நிறுவனம்தான் மற்ற பிரச்சனைகள் குறித்து பார்க்க வேண்டுமே தவிர அது குறித்து நான் கூறினால் சரியாக இருக்காது.

ஆனால் பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படாத வண்ணம் நாங்கள் கவனமாக நிறுவனத்திடமும் பேசியிருக்கிறோம். அதிகபட்சமாக ஏஜென்ட்கள் மூலம் டிக்கெட் புக் செய்யப்படுவதால் பயணிகளுக்கு தகவல் தெரிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் அதில் ஒரு சவால் இருப்பதாகவும் தெரிய வருகிறது. வருகிற நாட்களில் இந்த பிரச்சனையும் சரியாகும் என்று நம்புகிறோம்.

புதிய ஏ டி சி முனையம் திறப்பு விழா குறித்த கேள்விக்கு:

புதிய ஏடிசி முனையம் கட்டுமான பணிகள் முடிந்து விட்டது இறுதி கட்ட ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தவுடன் முழுமையாக செயல்பாடுகள் தொடங்கும். சோதனை செயல்பாடுகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டு விட்டது. விரைவில் தேதி அறிவிக்கப்படும்.

விமான ஓடுதள விரிவாக்கம் குறித்த கேள்விக்கு:

அந்த பணிகளில் 2 பிரச்சனைகள் உள்ளது ஆனைகுளம் மற்றும் பெரியகுளம் நீர்நிலைகள் கையகப்படுத்துவதில் அரசு தரப்பில் சில சிக்கல்கள் உள்ளது. எங்கள் தலைமையகம் மற்றும் தமிழக அரசு சார்பாக தற்போது நல்ல செய்திகள் வந்துள்ளது. விரைவில் இது குறித்து நல்ல அறிவிப்பு வரும்.

உள்நாட்டு வெளிநாட்டு விமான சேவை குறித்த கேள்விக்கு:

உள்நாட்டு சேவைக்கு நவி மும்பை மற்றும் பூனே நகரங்களுக்கு அட்டவணை குறிப்பிடப்பட்டிருந்தது தற்போது உள்ள இண்டிகோ பிரச்சனைகள் காரணமாக அது வருவதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கனவே இருந்த விமான சேவைகள் தொடர்ந்து வருகிறது புதிதாக எதிர்பார்த்த சேவைகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இரவு நேரங்களில் விமான சேவை குறித்த கேள்விக்கு:

ஏற்றுமதி இறக்குமதி செய்யக்கூடிய நிறுவனங்கள் கேமரா போன்ற நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதால் தான் இரவு நேர சேவைகள் தொடங்கப்பட்டது. ஆனால் இரவு நேரத்தில் விமான சேவை குறித்து விமான நிறுவனங்கள் தான் சொல்ல வேண்டும் விமானங்கள் இருப்பது மற்றும் அவர்களின் திட்டமிடல் காரணமாக இருக்கலாம் விமான நிலைய நிர்வாகம் சார்பாக 24 மணி நேரம் செயல்பட்டு வருகிறோம் எனக் கூறினார்.