துபாயில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது, 18 வயது இந்திய மாணவன் வைஷ்ணவ் கிருஷ்ணகுமார் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

துபாய் அகாடமி நகரில் மயங்கி விழுந்த வைஷ்ணவ், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். மருத்துவமனை, மாரடைப்பால் மரணம் நிகழ்ந்ததாக பதிவு செய்துள்ளது. மேலும் துபாய் காவல்துறை மற்றும் தடயவியல் துறை பரிசோதனை மேற்கொண்டு வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மாணவன் இதய நோய் பிரச்சனைகள் இல்லாதவர் என்றும், அவர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதிலும் மற்றும் உடல் நலன் காப்பதிலும் மிகக் கவனம் செலுத்தியவர் என்று மாணவனின் குடும்பம் தெரிவித்துள்ளனர்.
துபாயில் உள்ள மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பிபிஏ மார்க்கெட்டிங் பயின்றவர். கடந்த ஆண்டு 2024-25 CBSE வகுப்பு 12 வாரியத் தேர்வுகளில் 97.4% மதிப்பெண் பெற்றார். சந்தைப்படுத்தல் மற்றும் தொழில்முனைவோர் இரண்டிலும் (100/100) மற்றும் அனைத்து பாடங்களிலும் முழு A1 மதிப்பெண் பெற்றவர். இதையெடுத்து, அவருக்கு UAE கோல்டன் விசா வழங்கப்பட்டது.
பல திறமைகள் கொண்ட வைஷ்ணவ், சமூக ஊடகங்கள் உடல் நலம் மற்றும் வாழ்க்கை முறை குறித்து ஊக்க பதிவுகளும் வெளியிட்டு வந்துள்ளார். குடும்பம் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பி இறுதி சடங்கு நடத்த திட்டமிட்டுள்ளன.
மேலும், பல்கலைக்கழகம் மற்றும் பள்ளி மாணவனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளன. பள்ளி, “உண்மையான நட்சத்திர மாணவர்” எனப் புகழாரம் சூட்டி, சில நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது.