• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

தென்காசி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள்.. கண்துடைப்பு நாடகமா?

தென்காசி மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம் நலவாழ்வு மையங்கள் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய இடைநிலை சுகாதாரப் பணியாளர் பணிகளுக்கு ஆட்சியர் அலுவலகம் மூலம் 132 பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாமென அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மாவட்ட ஆட்சி அலுவலர் வளாகத்தில் உள்ள மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இடைநிலை சுகாதாரப் பணியாளர் பணிக்கு 92 பேரும் மற்றும் பல்நோக்கு சுகாதார பணிக்கு 42 பணியாளர்களும் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

அதற்குரிய விண்ணப்பப்படிவத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, வயது, கல்வித்தகுதி, நிரந்தர முகவரி, தற்போதைய வீட்டு முகவரி, ஆதார் எண், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மேலும் பின்பக்கம் அறிவிக்கப்பட்டுள்ள தேவையான சான்றுகளை இணைக்க கேட்டுக்கொண்டுள்ளனர்.

சமீபத்திய 2 மார்பளவு புகைப்படங்கள், பிறந்த தேதிக்கு ஆதாரமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ்கள், கல்வித் தகுதிக்கு பத்தாம் வகுப்பிலிருந்து உயர்கல்வி வரை பெற்ற சான்றிதழ்கள், தமிழ் வழியில் பயின்றதற்கான பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள், குடியிருப்பு ஆவணமாக வருவாய்த்துறை நடைபெற்ற இருப்பிட சான்று, வாக்காளர் அடையாள அட்டை, ஊராட்சி நகராட்சி, மாநகராட்சி தீர்வை ரசீது, ஆதார் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை ஏ அல்லது பி கிரேட் அரசு கெஜட் அதிகாரியினுடைய நன்னடத்தை சான்று, கடைசியாக படித்த பள்ளியில் தலைமை ஆசிரியரால் வழங்கப்பட்ட நன்னடத்தை சான்று, மாற்றுத்திறனாளிகளுக்கான சான்று, கணவனால் கைவிடப்பட்டவர்,

ஆதரவற்ற விதவை சான்று, பணியில் இருந்தால் தடையில்லா சான்று, முன் அனுபவச் சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. பிறப்பிற்கு ஆதாரமாக 5 வகையான ஆவணங்களில் ஏதாவது ஒன்று அளித்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இணை இயக்குனர், சுகாதாரத் துறை அலுவலகத்தில் வருவாய்த்துறை இருப்பிடச் சான்று சொத்துவரி வீட்டுவரி மின் கட்டண ரசீது இதெல்லாம் இருந்தால்தான் விண்ணப்பமே வாங்குவோம் என விண்ணப்பதாரர்கள் வெளியேற்றி வருவதாக விண்ணப்பதாரர்கள் கூறிவருகின்றனர்.

ஆகவே நாளை மாலை 5 மணியுடன் நிறைவடையும் விண்ணப்பம் பெரும் கால அளவை பிடிக்க வேண்டும் அல்லது விண்ணப்பதாரர்கள் தரும் விண்ணப்பப்படிவம் மற்றும் சான்று நகல்களை பெற்று நேர்முகத்தேர்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென விரும்புகின்றனர்.

விண்ணப்பதாரர்கள் வேண்டும் என்று அலைக்கழிப்பது ஆட்சிக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில அதிகாரிகள் செயல்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுகிறது. ஆகவே மாவட்ட ஆட்சியர் இந்த பிரச்சனையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். விண்ணப்பங்களை வாங்க மறுக்கும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.