• Tue. Apr 30th, 2024

தென்காசியில் நடைபெறும் மின் சிக்கன வார விழா

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மின் சிக்கன வார விழாவை மேற்பார்வை பொறியாளர் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் மின் நுகர்வோர் கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மின் சிக்கன வார விழா கொண்டாடப்படும். அதனடிப்படையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிற்கிணங்க மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தலின் பேரில் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தில் மின்சார சிக்கனம் வார விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கோட்டத்தில் நடைபெற்ற மின் சிக்கன வார விழா மற்றும் விழிப்புணர்வு பேரணியை திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் ராஜன் ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். கடையநல்லூர் கோட்ட பொறியாளர் நாகராஜன் வரவேற்று பேசினார். முதன்முதலாக திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளராக பணி நியமனம் பற்றி வருகை புரிந்த கோட்டை பொறியாளருக்கு கடையநல்லூர் உதவி பொறியாளர் தொமுச பேரவையின் கோட்டச் செயலாளருமான சின்னதுரை பொன்னாடை போர்த்தியும், முன்னாள் முதல்வர் கலைஞர் பற்றிய புத்தகம் வழங்கியும் வரவேற்றார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் மின்சக்தி குறித்தும், மின்சார சேமிப்பு குறிப்பாக மின் விளக்குகள், குளிர்பதனப் பெட்டி, ஏர் கண்டிஷனர், வாட்டர் ஹீட்டர், தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் மற்றும் வாஷிங் மெஷின் ஆகியவற்றை உபயோகிப்பது குறித்தும் ஆள் இல்லாத அறையில் ஓடு மின்விசிறி, ஒளிரும் மின் விளக்கு, நிரம்பிய பின்னும் நிறுத்த மறந்த நீரேற்றும் இயந்திரம், யாருமே பார்க்காத டிவி, நீண்ட நேரம் செயல்பாடு இல்லாமல் இருக்கும் மடிக்கணினி, கதவை மூடிய பின்னும் அணைக்க மறந்த கழிவறை மின்விளக்குகள், ஏசியை ஓட விட்டு ஜன்னலையும் கதவையும் மூட மறந்தது ஏசி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவற்றை ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆப் செய்துவிட்டு சுவிட்சை அணைக்காமல் ஸ்டெபிலைசர் பல மணி நேரம் இயக்கத்தில் வைப்பது போன்ற குறைபாடுகளையும் எடுத்துரைத்தார். வீடுகளில் குழந்தைகள் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து பராமரிப்பது, எர்த் லீக்கேஜ், சர்க்யூட் பிரேக் கரை வீடுகளில் மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்துவதன் மூலம் மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்க முடியும். ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற நட்சத்திர குறியீடு மின் சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிரிட்ஜ் கிரைண்டர் போன்றவற்றை எர்த் உடன் கூடிய மூன்று பின் ஜாக்கெட் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மோட்டார் அயன் பாக்ஸ், வாயில் சுரக்கும் வாட்டர் ஹீட்டர் ஆகியவை மின் இணைப்பில் இருக்கும் பொழுது கையால் தொடக்கூடாது. சுவிட்ச்கள் பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைத்திட வேண்டும். உடைந்த சுவிட்சுகள் பிளக்குகள் பழுதுபட்ட வயர்கள் மின் சாதனங்கள் பயன்பாட்டில் இருப்பின் அவற்றை தாமதமின்றி புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என கருத்துகளை கூறினார்.

இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் உதவி செயற் பொறியாளர்கள் அருண்ராஜ் ரபீக் பென் உசைன் மற்றும் ராஜமாணிக்கம் உட்பட கடையநல்லூர் புளியங்குடி சிவகிரி கோட்டப் பொறியாளர்கள் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *