கோவை, அவினாசி ரோடு புதிய மேம்பாலத்தை திறந்து வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை மாநகருக்கு வர இருப்பதால் வரும் அக்டோபர் 9ம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,
நீலாம்பூர் வழியாக நகருக்குள் வரும் கனரக வாகனங்கள்,
பேருந்துகள், நீலாம்பூர் ஏர்போர்ட் வழியாக சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் ஆம்னி பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து நகருக்குள் வருவதற்கு தடை செய்யப்படுகிறது. மாறாக நீலாம்பூரிலிருந்து எல்&டி பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், ராமநாதபுரம், சுங்கம் வந்து வலது புறம் திரும்பி கே.ஆர் ரோடு, அவினாசி சாலை, அண்ணா சிலை வழியாக காந்திபுரம் வந்தடையலாம். நீலாம்பூரிலிருந்து ஏர்போர்ட் வழியாக நகருக்குள் வரும் இலரகு வாகனங்கள், தொட்டிபாளையம் பிரிவில் வலது புறம் திரும்பி தொட்டிபாளையம், காளப்பட்டி நால்ரோடு, விளாங்குறிச்சி வழியாக நகருக்குள் வரலாம்.

காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து அவினாசி ரோடு, ஏர்போர்ட் வழியாக நகருக்கு வெளியே செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், லட்சுமி மில்லில் யூ டர்ன் செய்து புளியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், எல்&டி பைபாஸ் வழியாக வெளியே செல்லலாம். அதே போன்று காந்திபுரத்திலிருந்து சத்தி சாலை வழியாக கணபதி, வாட்டர் டேங்க், விளாங்குறிச்சி, காளப்பட்டி நால் ரோடு வழியாக எல்&டி பைபாஸ் சென்று அடையலாம். நகருக்குள் இருந்து அவினாசி ரோடு, ஏர்போர்ட் வழியாக செல்லும் இலரகு வாகனங்கள் மற்றும் நகர பேருந்துகள், டைட்டல் பார்க் வரை சென்று U-Turn செய்து காமராஜர் ரோடு, சிங்காநல்லூர் வழியாக செல்ல வேண்டும்.

விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல், காந்தி மாநகர், கொடீசியா வழியாக செல்லும் கனரக வாகனங்கள் கொடீசியா வழியாக செல்வதற்கு தடை செய்யப்படுகிறது. அதற்கு மாறாக காளப்பட்டி நால் ரோடு, தென்னம்பாளையம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் தண்ணீர் பந்தலில் இருந்து கொடீசியா வழியாக செல்லும் இலரகு வாகனங்கள் காந்தி மாநகர், பயனீயர் மில் வழியாக அவினாசி ரோட்டை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலம், சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் அனைத்தும் குறிச்சி பிரிவில் இடது புறம் திரும்பி போத்தனூர் கடை வீதி, ரயில் கல்யாண மண்டபம், செட்டிபாளையம் ரோடு வழியாக ஈச்சனாரி அடைந்து சர்வீஸ் சாலை வழியாக செல்லலாம்.
பொள்ளாச்சி சாலை வழியாக நகருக்குள் வரும் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் கற்பகம் காலேஜ் சந்திப்பிலிருந்து மேம்பாலத்தின் மேல் வராமல் சர்வீஸ் சாலையில் வந்து ஈச்சனாரி கோயில் முன்பு யூ டர்ன் செய்து, செட்டிபாளையம் ரோடு, ரயில் கல்யாண மண்டபம், போத்தனூர், நஞ்சுண்டாபுரம் ரோடு, ராமநாதபுரம் வழியாக நகருக்குள் வரலாம்.
மதுக்கரை மார்க்கெட்டிலிருந்து வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் பிள்ளையார்புரம் செக் போஸ்ட், சுகுனாபுரம் வழியாக கோவைப்புதூர் பிரிவு, குனியமுத்தூர், புட்டு விக்கி வழியாக நகருக்குள் வரலாம்.
மதுக்கரை மார்க்கெட்டிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் மாச்சாம்பாளையம் பிரிவிலிருந்து இடது புறம் திரும்பி ஞானபுரம், பாலக்காடு ரோடு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம் எனக் கூறப்பட்டுள்ளது.