தசரா, நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் வரிசை கட்டி வரும் நிலையில், பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், மைசூர் – திருநெல்வேலி, காரைக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மைசூரிலிருந்து இன்று செப்டம்பர் 15ம் தேதி திங்கட்கிழமை முதல் நவம்பர் 24ம் தேதி வரை திங்கட்கிழமைதோறும் காலை 8.15 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06239) மறுநாள் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 16ம் தேதி காலை 11.30 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்
மறுமார்க்கத்தில் திருநெல்வேலியிலிருந்து செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 16 ம் தேதி முதல் நவம்பர் 25ம் தேதி வரை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் பிற்பகல் 3.40 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06240) புதன்கிழமைகளில் காலை 5.40 மணிக்கு மைசூர் நிலையத்தை அடையும்.
இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், மதுரை, கொடைரோடு சந்திப்பு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மைசூரிலிருந்து செப்டம்பர் 18ம் தேதி முதல் நவம்பர் 29ம் தேதி வரை வியாழன் மற்றும் சனிக்கிழமை என இருவார சிறப்பு ரயில் (எண் 06243) இரவு 11.20 மணிக்குப் புறப்பட்டு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு காரைக்குடி சென்றடையும்.
காரைக்குடியிலிருந்து செப்டம்பர் 19 முதல் நவம்பர் 30ம் தேதி வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள்களான சனி, திங்கள்கிழமைகளில் காலை 7.45 மணிக்கு மைசூர் சென்றடையும். இந்த ரயில் புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல் சேலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ராமநாதபுரத்துக்கு மைசூரிலிருந்து திங்கட்கிழமை செப்டம்பர் 15ம் தேதி முதல் அக்டோபர் 27ம் தேதி வரை திங்கட்கிழமைகளில் மாலை 6.35 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ராமநாதபுரத்தை வந்தடையும். மறுமார்க்கத்தில் ராமநாதபுரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 16ம் தேதி முதல் அக்டோபர் 28 வரை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06238) மறுநாள் புதன்கிழமை மைசூரு நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.