காரைக்கால் மாவட்டம் கீழ ஓடுதுறை பகுதியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டு கடந்த 1976 ஆம் ஆண்டு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருக்கரங்களால் திறக்கப்பட்ட ஆலயம் என்பது இந்த ஆலயத்தின் தனி சிறப்பாகும்.
இவ்வாலயத்தில் இந்த ஆண்டு திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி நாளான இன்று திருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலியை தலைமை பங்குத்தந்தை பால் ராஜ்குமார், இணை பங்கு தந்தை சாமிநாதன் செல்வம் ஆகியோர் நடத்தினர். அதனைத் தொடர்ந்து மின்விளக்குகள் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் புனித அந்தோணியார் சுருபம் வைக்கப்பட்டு பங்கு தந்தையால் திருத்தேர் மந்திரிக்கப்பட்டு மின்விளக்கு அலங்காரத் தேர் பவனி சிறப்பாக நடைபெற்றது. இத்தேர்பவனில் இரு கிராம முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட ஏராளமான பங்கு மக்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.